Wednesday 31 October 2018

பரீட்சை காமெடிகள்


 பரீட்சை என்றால்  60  -70  களில் எல்லாம் சீரியஸான முகத்துடன்  நெற்றியில் அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தாற்போல் விபூதி  குங்குமம் நாமம் செந்தூரம் போன்றவைகள்  நெற்றியில்  வைக்கப்பட்டிருக்கும் . இவற்றை இட்டுக்கொண்டால் நாம் படித்த பாடத்திலிருந்து மட்டுமே கேள்விகள் வரும் , நாமும் பாஸ் பண்ணிவிடலாம் என்று பரவலாக நம்பப்பட்டது.

 நான் படித்தது திருச்சியில் என்பதால் எஸ் எஸ் எல் சி பரீட்சை அன்று காலையில் தந்தை/தாய்  சகிதம் அல்லது தனியாக  பல மாணவர்கள்  மலைக்கோட்டை கீழே உள்ள மாணிக்க விநாயகர் சந்நதியில் ஆஜராகி இருப்பார்கள் . ஹி ஹி நானும் கூடத் தான் .

நாங்கள் பரீட்சைக்குக்     கிளம்பும்போது சகுனங்கள் பார்ப்பார்கள் . பூனை நிச்சயம் கிராஸ் பண்ணக்கூடாது . பால் கொண்டு வருபவர் எதிரில் வரக்கூடாது போனால் போகட்டும் போன்ற அபசகுமான பாடல்களைத் தவிர்க்கும் முறையாக ரேடியோ வைக்கமாட்டார்கள் .இன்ன பிற ...

என்னால் மறக்க முடியாத ஒரு நம்பிக்கை நாம்  படிக்கும் போது கழுத்தை கத்தினால் அந்த chapter லிருந்து கேள்வி வருவது சர்வ நிச்சயம் .என்று நம்பப்பட்டது.  கேள்வி செட் பண்ணுபவருக்கும் கழுதைக்கும் நாம் படிக்கும் chapter க்கும் என்ன மாதிரி டெலிபதி என்று தெரியவில்லை இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது  ( திருச்சியில் அந்தக் காலத்தில் கழுதைகள் நிறைய இருக்கும்)

 பிறகு நான் வேலை கிடைத்து சென்னையில் ஹாஸ்டலில் தங்கி இருந்தபோது வேறு நல்ல வேலைக்கு முயன்றுகொண்டிருந்தபோது இந்த சகுனங்கள் எல்லாம் பார்க்க முடியவில்லை , கிட்டத்தட்ட இவையெல்லாம் மறந்து விட்ட சமாச்சாரங்களாகவே போய் விட்டன 

. ஆனாலும் என் அதிர்ஷ்ட பென்சில் பாக்ஸ்  மட்டும்  எல்லாப்  பரீட்சைகளிலும் எல்லா ஊர்களிலும்  என் கூடவே வந்துவிடும் . இது பற்றி முன்பே ஒரு பதிவில் ஃ போட்டோவுடன் எழுதிவிட்டேன்.



என் மகன்கள் படித்த காலங்களில் நான் வேலையில் இருந்ததால் இவைகளை எல்லாம் பார்க்கவில்லை .

 ஆனால் அவர்கள் பத்தாவது பன்னிரண்டாவது பரீட்சை எழுதிய எல்லா நாட்களிலும் மூன்று மணி நேரம் சாமி ரூமில் உட்கார்ந்து அங்கு பரீட்சை ஆரம்பிக்கும்  நேரத்திலிருந்து முடியும் வரை  தொடர்ந்து சாமி கும்பிடுவேன் 
.
10 மணிக்குப் பரீட்சை என்றால் பாத் ரூம் எல்லாம் போயிட்டு வந்து வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டி விட்டு உட்காருவேன் , இது வாலண்டரி ரிட்டையர் மெண்டு வாங்கியதால் சாத்தியமாயிற்று  முடிந்தவரை நடுவில் எழுந்திருக்க மாட்டேன் , ஏனெனில் என் அம்மா எங்களுக்கு அப்படிச் செய்த காரணத்தால்.
 ஒரு 5  வருடம் முன்பு ஜப்பானிய பரீட்சை எழுதினேன் , அப்போது என் ஜப்பானியத் தோழி என்னிடம் சொன்ன விஷயம் .
எந்தக்காரணத்தைக் கொண்டும் தலைக்குக் குளிக்க வேண்டாம் , அப்படிச் செய்தால் படித்ததெல்லாம் தண்ணியோடு போய்விடுமாம் .
பிறகுதான் தெரிந்தது ரஷியாவிலும் இந்த நம்பிக்கை உண்டு . பரீட்சை அன்று தலை குளிக்கமாட்டார்கள் என்று

இரணடாவது டிப்ஸ் மறக்காமல் கிட்-கேட்  (kit -Kat) சாக்லேட் வாங்கிச் சாப்பிடணும் . பாஸ் நிச்சயம் என்றாள். கிட் கேட் என்பதை ஜப்பானியர்கள் கித்தோ கத்சு என்பார்கள் அப்படி என்றால் நிச்சயம் வெற்றி என்று பொருள் .

என் தோழி ஒருத்தி ஸ்கூல் படிக்கும் போது தலை வாராமல் வருவாள் , ஏனென்றால் படித்ததை எல்லாம் சீப்பு அப்படியே  வாரிக்கொண்டு போய்விடும் அது ரிசல்ட்டை வாரிவிட்டுவிடுமாம் , முதல் நாள் இரவே தலை சீவி விட்டுக்கொண்டு விடுவாள்.

சிலர் பரீட்சை க்கு என்றே தனி பேனா வைத்துக்  கொள்வார்கள் .
ஒரு சிலர் பரீட்சைக்கு என்றே ராசியான டிரஸ் வைத்துக் கொண்டு அதையே  தொடர்ந்து இருக்கும் பரீட்சை  நாட்களிலும் தினமும் போட்டுக் கொண்டுவருவார்கள் ,

 இன்னும் சிலர் இட்லி  தவிர்ப்பார்கள் , ( வெள்ளை முட்டை மாதிரி இருப்பதால் ) எங்க வீட்டில் வத்தக் குழம்பு  ஊற வைத்த பருப்புகள் கொண்டு செய்யும் குழம்பு கூட்டு கறி,,பாகற்காய் சுண்டைக்காய் கறி  செய்ய மாட்டார்கள் .

இதையெல்லாம் என் மகனிடம்  சொன்னபோதுஅவன் சொன்ன காமெண்ட் " அப்ப   நீ  ஒழுங்காகப் படிக்காமல் இப்படித்தான் கழுதை கத்தின பாடம் , ராசியான பென்சில் டப்பா பாட்டியோட பிரார்த்தனை  இதுங்களால தான் பாஸ் பண்ணிட்டே வாழ்க்கையை ஓட்டிட்டியா  ?


 வெளி வேலைகளும் வீட்டு வேலைகளும் சேர்ந்து கொண்டதால் பிளாக் பக்கமே  வர முடியவில்லை .


Wednesday 1 August 2018

குறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க


எனது குழிப்பணியாரச் சட்டி சோதனைகளில்  வெற்றிக்கு மேல் வெற்றியே!
 வடை பண்ணலாம் என்றுதான்  நினைத்தேன் .
ஆனால் சாப்பிட ஆள் வேண்டும் என்பதால் அந்த முயற்சியைச் சிறிது தள்ளிவைத்துள்ளேன் .
.
 சரி என்று ஹோதாவில் இறங்கி சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்து பார்த்தேன்.
சும்மா சொல்லக்கூடாது தேவாமிர்தம் 

இன்று வத்தல் குழம்பு (புளிக்  குழம்பு ) +.சேப்பங்கிழங்கு ரோஸ்ட்  நல்ல காம்பினேஷன் ஆக இருந்ததது .
அதுவும் தயிர் சாதத்துடன்  சகலவிதமான பொருத்தங்களும் அம்சமாகப் பொருந்தியது . 

தேவையான பொருட்கள்:

 வேகவைத்த சேப்பங்கிழங்கு  14 துண்டுகள் (ஏழு குழி என்பதால் )
 காரப் பொடி  தேவைக்கேற்ப
 உப்பு                  தேவைக்கேற்ப 
எண்ணெய்          மிகக் குறைந்த அளவு

 செய்முறை :

 முதலில் சேப்பங்கிழங்குகளைக் கழுவி விட்டு நன்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .


 பிறகு அதில் காரப் பொடி உப்பு சேர்த்து நன்கு  கலந்து வைக்கவும்.எண்ணெய் தடவ வேண்டாம் .

அதன் சாரம் நன்கு கிழங்கில் சேரும் வரை ஒரு பத்து நிமிடம் ஊறவைக்கவும் .(Marinate )




 பிறகு குழிப்பணியாரச் சட்டியை   அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் ஒவ்வொரு குழியிலும் ஒரு ஒரு சேப்பங்கிழங்கினைப் போடவும் .

ஒரு ஐந்து நிமிடம் ஆனதும் ஃ போர்க் கொண்டு திருப்பி விடவும் .இரண்டே நிமிடத்தில் நன்கு ரோஸ்ட் ஆகிவிடுகிறது .


 முதல் செட் தான் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது , அடுத்த செட் எல்லாம் சீக்கிரம் ரோஸ்ட் ஆகிறது ,


ஒரு ஒரு கிழங்கும் பர்ஃ பெக்கெட்டாக எல்லாப் பக்கமும் ரோஸ்ட் ஆகி ஒன்றோடொன்று சேர்ந்து குழைந்து போகாமல்  இருந்தது பார்க்க அழகு .எண்ணெய் செலவும் மிக மிகக் குறைவே .என்பது பெரிய பிளஸ் பாய்ண்ட் ።


 சேப்பங்கிழங்கு ரோஸ்டின் அல்டிமேட் என்பதே இது தானோ என்று நினைக்கும் அளவுக்கு டேஸ்ட் ஆக இருந்தது
சூடாகச் சாப்பிடும் போது எனக்கு நானே ஏதாவது ஒரு அவார்டு கொடுத்துக் கொள்ளலாம் போலத் தோணியது.




Friday 27 July 2018

குழிப்பணியாரச் சட்டியில் போண்டா




எனக்கு இந்த எண்ணெய் பண்டங்களான வடை பஜ்ஜி இதெல்லாம் சுத்தமாப் பிடிக்காது என்னும் இனத்தைச் சேர்ந்தவள் அல்ல ,
ஆனாலும் இவற்றையெல்லாம் ஒதுக்கி விடுவேன் .
காரணம் அதன் பின் வரும் வயிற்று வலி தான் . 
பிரச்னை என்றால் தீர்வும் இருக்கத்தானே வேணும் என்று யோசித்தபின் குழிப்பணியாரச் சட்டியில் போண்டா  போட்டால் எப்படி ?
தீவிரமாகச் செயலில் இறங்கினேன் 

ப்ராஜெக்ட் செம்ம  சக்ஸஸ் ..

செய்முறை இதோ:
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு          2 வேகவைத்தது
பட்டாணி                 ஒரு சின்ன கப் வேகவைத்தது
காரட் துருவல்            கொஞ்சம்
சோயா நக்கெட்           ஒரு சின்ன கப்
பச்சை மிளகாய்           காரத்திற்கேற்ப
பச்சைக் கொத்தமல்லி     கொஞ்சம்
உப்பு                      தேவைக்கேற்ப

 மற்றபடி பீன்ஸ் காலி பிளவர் யோக்ய பிளவர் என எது வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் . 




நான்   இதுவே முதல் முறை என்பதால்  காய்களின் எண்ணிக்கை மற்றும் அளவிலும்    குறைவாகவே  எடுத்துக் கொண்டேன் ,

 பிறகு பட்டாணி தவிர மற்ற எல்லாவற்றையும்  நன்கு மசித்ததுக்கொள்ளவும்.


பிறகு   பச்சைப் பட்டாணியையும் சேர்த்துக்   கைகளில் எண்ணை தடவிக்கொண்டு   உருண்டைகளாக உருட்டவும் .


பிறகு குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்தது சூடேறியதும்  குழிகளில் மிகக் குறைந்த அளவே எண்ணெய் விட்டு இந்த உருண்டைகளைப்  போட்டு நன்கு வெந்தபின்பு  திருப்பிப் போடவும் .



இரு புறமும் நன்கு வெந்தபின்பு தட்டில் போட்டு சாப்பிடலாம்.



வெளிப் பகுதி நன்கு மொறு மொறுவாகவும் உள்பகுதி  சாஃப்ட் ஆகவும் இருக்கும்.
 .
 நான் சாஸ் உடன் சாப்பிட்டேன்
சட்னி கூட இதுக்கு நல்ல கூட்டாளியாக இருக்கும் .

இதில்  எண்ணெய் செலவு மிகமிகக் கம்மி .

சீக்கிரமாகவும் வெந்து விடுகிறது.

 வடை கூட இதே பாணியில் செய்யலாமா என்று தெரியவில்லை . செய்து பார்த்த பின் பதிவிடுகிறேன் .
  டிஸ்கி:
சொந்த வேலை காரணமாக பதிவுகள் எழுதவோ ,யாருக்கும் காமெண்ட் போடவே முடியவில்லை 
இனிமேல் தான் தொடரணும்.


Tuesday 16 January 2018

தலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க


 யாரும் நம்மளைக் கல்லாலே  அடிக்கமுடியாதபடி தலைப்பு வைக்கணுமின்னு   மூளையை எப்படிக் கசக்கிப் புழிஞ்சாலும்  அப்படி ஒரு தலைப்பு ......ம்ஹூம் .....எதுவுமே சரிவரல .
எனவே தான்  இந்தத் தலைப்பு .

சரி விஷயத்துக்கு வருவோம் .

சாதம் வடிக்க இவ்வளவு பில்டப்பா  என்று நினைக்க வேண்டாம் . (இதைக் கூட தலைப்பாக நினைத்தேன் )

சாதம்எ சமைக்க என்று    எ லக்ட்ரிக் ரைஸ்  குக்கர் மட்டுமே  ஒரு  இருபத்தி அஞ்சு வருஷமாகப் பயன்படுத் தியதால்
வடிச்ச சாதம் சமைக்க ஆரம்பிச்சதிலே இருந்து
எனக்கு என்னவோ  எல்லோரும்  பின்பற்றுகிற பழைய  முறை சரிவரவில்லை .

"சிஸ்டம் சரியில்லை "என்று பல முறை  நினைத்தேன் .

காரணம் ?

முதலில் தண்ணீர்  கொதி வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது .

பிறகு  களைந்த அரிசியைக்  கொதி நீரில் கொட்டும் போது சில சமயம் கைகளில் தெறிக்கிறது .புண்ணாகி விடுகிறது .

அடிக்கடி  கிண்டி விட வேண்டியுள்ளது , சில சமயம் கவனக் குறைவாக இருந்தால் அடிப் பிடித்து விடுகிறது

வெந்துடுச்சா  என்று செக் பண்ணவேண்டியுள்ளது .

பிறகு வடி தட்டு வைத்து வடிக்கும் பொழுது  சமைத்த பாத்திரமும் வடித்தட்டும் மேட்ச் ஆகவில்லை என்றாலும் கையில் கஞ்சி கொட்டிவிடுகிறது.

சில சமயங்களில் கஞ்சியில் கொஞ்சம் சாதம் கொட்டி விடுகிறது .


இத்தனை பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இப்பொழுது நான் பழையபடி
எலக்ட்ரிக் ரைசு குக்கரில்  அரிசி  தண்ணீர் எல்லாம் ஒன்றாக வைத்து  (அளவு  ? அரிசி ஒரு பங்கு+ தண்ணீர் ஏழரைப் பங்கு  )  குக்கர் வெளியிலும் அதிகப்படி தண்ணீர் வைத்து விடுகிறேன் .



நாம்  சும்மா சும்மா என்ன ஆச்சுன்னு  status பாக்க வேண்டியதே இல்லை . ஒரு முக்கால் மணி நேரம் கழித்துப்  பார்த்தால்   சரியான பதத்துடன்  வெந்த சாதம்  நீருடன்  இருக்கும் .


அதை  வெளியில் எடுத்து இது போன்ற வடிகட்டியில் வைத்து வடிகட்டினால்   அப்பாடா !  வடிச்ச சாதம் ரெடி .




இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்காதீர்கள் .

அரிசியை  அடுப்பில் வைத்து விட்டு நாம் வேறு எந்த வேலையையும் ஹாய்யாகச்  செய்யலாம் .


  டிஸ்கி : இந்தப் பதிவிற்கு வேறு நல்ல தலைப்பு என்ன வைக்கலாம் சொல்லுங்களேன்

Monday 8 January 2018

தங்கமே என் தங்கமே


நானும் பல வருடங்களாகப் பார்க்கிறேன் தங்க நகைக்கடைகளில் எப்போதுமே கூட்டம் ஜே ஜே என்றுதான் இருக்கிறது .
  டிவியில் தினம் தினம் எங்கள் கடையில் தங்கம் வாங்குங்க என்று பல நகைக்கடைகள் ஏகப்பட்ட காரணங்கள் கூறுகிறார்கள் . அதே போல் எங்களிடம் தங்கம் விற்றால் உங்களுக்கு லாபம் என்றும் சில நிறுவனங்கள் சொல்கிறார்கள் . பொதுவாகவே தங்கத்தில் முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமான ஒரு நல்ல தெரிவு என்ற எண்ணம் பரவலாக உள்ளது . நிச்சயமாகத் துணி மணிகளில்  பாத்திரம் பண்டம் வேண்டாத சாமான்களில் செய்யும்  செலவை விட உத்தமம் தான் ,மறுக்கவில்லை . இந்த ஐந்து வருடங்களில் தங்கத்தின் குறைந்தபட்ச  விலை   மற்றும்    அதிக பட்ச விலை ,
 . தவிரப்  பல வருடங்களாக தங்கம் விலை எப்படி இருந்துள்ளது என்றும் நெட்டிலிருந்து எடுத்துள்ளேன் .

வருடம்
குறைந்தபட்ச  விலை  
அதிக பட்ச விலை

2013
2986.80
3113.20
2014
2838.80
2983.30
2015
2601.27
2819.90
2016
2491.00
3233.62
2017
2744.50
3042.82
2018
2907.00
2926.00

64
Rs. 63.25
1991
Rs. 3,466.00
1965
Rs. 71.75
1992
Rs. 4,334.00
1966
Rs. 83.75
1993
Rs. 4,140.00
1967
Rs. 102.50
1994
Rs. 4,598.00
1968
Rs. 162.00
1995
Rs. 4,680.00
1969
Rs. 176.00
1996
Rs. 5,160.00
1970
Rs. 184.00
1997
Rs. 4,725.00
1971
Rs. 193.00
1998
Rs. 4,045.00
1972
Rs. 202.00
1999
Rs. 4,234.00
1973
Rs. 278.50
2000
Rs. 4,400.00
1974
Rs. 506.00
2001
Rs. 4,300.00
1975
Rs. 540.00
2002
Rs. 4,990.00
1976
Rs. 432.00
2003
Rs. 5,600.00
1977
Rs. 486.00
2004
Rs. 5,850.00
1978
Rs. 685.00
2005
Rs. 7,000.00
1979
Rs. 937.00
2006
Rs. 8,400.00
1980
Rs. 1,330.00
2007
Rs. 10,800.00
1981
Rs. 1,800.00
2008
Rs. 12,500.00
1982
Rs. 1,645.00
2009
Rs. 14,500.00





1983
Rs. 1,800.00
2010
Rs. 18,500.00
1984
Rs. 1,970.00
2011
Rs. 26,400.00
1985
Rs. 2,130.00
2012
Rs. 31,050.00
1986
Rs. 2,140.00
2013
Rs. 29,600.00
1987
Rs. 2,570.00
2014
Rs.28,006.50
1988
Rs. 3,130.00
2015
Rs.26,343.50
1989
Rs. 3,140.00
2016
Rs.28,623.50
1990
Rs. 3,200.00




 Source :https://www.bankbazaar.com/gold-rate/gold-rate-trend-in-india.html




தங்கத்தில் முதலீடு என்பது சராசரியாக 8 முதல் 10  சதவிகிதம் வருட வருமானம்  தருவதாக இருக்கிறது .


ஆனால் வாங்கும்போது போடும் செய்கூலி ,சேதாரம் ,வரி, மற்றும் விற்கும்போது போடும் செய்கூலி சேதாரம் வரி இவைகளைக் கணக்கில் கொண்டு போட்டால் சராசரியாக ஒரு 7 சதவிகித வருமானம் மட்டுமே எட்டும் ..ஆனால் என்ன நகையை வைத்துக் கொண்டு பணம் புரட்டுவது என்பது நிலம் ,வீடு இவைகளுடன் ஒப்பிட்டால் ஈஸியான ஒன்று . தவிர சிறிய அளவு முதலீடும் செய்ய முடியும். எனவேதான்   மக்களிடையே தங்கத்திலான முதலீடு பிரபலமாக உள்ளது போலே.