Sunday 27 November 2016

எல்லோருமே ஒரு நிமிட சிந்தனையாளர்கள் / படைப்பாளிகள்




 எழுதுவது என்பது நிச்சயமாக ஒரு கலை,

 ஆனால் அதை ஒரு ஒரு சிறிய  வட்டத்திற்குள் அடைத்து இதுதான் கதை இது  மட்டுமே கட்டுரை, இவர்களின் எழுதும்   பாணிதான்  எழுத்தின்  இலக்கணம்  என்று கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது .


நான் சொல்வது  எழுபது எண்பதுகளில் .

 எனக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது ,
 என் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக நானே  நாட்டு  நடப்பு பற்றின என் எண்ணங்களை எழுதுவேன் .

என் ஆங்கில /தமிழ்   கட்டுரைகள் நன்றாக  உள்ளன என்று பலர் சொன்னாலும் , நான் எழுத்தை என்  முழு நேரத் தொழிலாக வைத்துக் கொள்ள நினைத்ததில்லை .

ஏனெனில் அது  சோறுபோடுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது .
 தவிர என் வேலை அரசாங்க வேலை ,ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை .

இருப்பினும் வேலையில்  இருந்தபோது  என் பக்கத்துக்கு அறையில் இருந்த தோழி மதுரைக்காரர் . தமிழ் எம்  

நாங்கள் இலக்கியம் அரசியல்  பெண்ணியச் சிந்தனைகள் ,அலுவலகத்தில் பெண்களின் பிரச்சனைகள் என  பல விஷயங்கள் குறித்துப் பேசுவோம் .

அவருக்கு என் எழுதும் ஸ்டைல்  பிடித்திருந்தது ,

அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் மிகப் பிரபலமான பத்திரிகையில் முக்கிய பொறுப்பில் இருந்தார்

என்னையும் ஒரு கதை ,இரண்டு கட்டுரை எழுதச்சொல்லி , தானும் எழுதி  அவர் வீட்டுக்கே  ஒரு சுப யோகங்கள் நிறைந்த  வளர்பிறை நாளில் ஞாயிற்றுக் கிழமை   சென்று அவரிடம் நேரில் கொண்டு  கொடுத்தார்

எங்கள் இருவரின் எழுத்து பாணி அப்பொழுது பிரபலமாக இருந்த எழுத்தாளர்களின் பாணியிலிருந்து வேறு பட்டிருந்தது .

 எனவே அவர் என் தோழியிடம் ' அந்த எழுத்தாளர்களின் பாணியைப் பின்பற்றுமாறு அறிவுரை கூறித் திருப்பிக் கையிலேயே கொடுத்து விட்டார் .

 அவங்க பாணியிலே எழுதணுமின்னா நாம எதுக்குன்னுட்டு பேசாம இருந்துட்டோம் .

நாங்கள் எங்கள் சுயத்தை  இழக்க விரும்பவில்லை.

பல காரணங்களால் எழுத்து ஆசை க்கு ஒரு பெரிய விடுமுறை . பிறகு 1999 ல்  எழுத ஆரம்பித்தேன் , கதை அல்ல , நான் எழுத ஆசைப்பட்ட  எந்த ஒரு தலைப்பிலும் எழுதினேன்
மங்கையர் மலர் ,சிநேகிதி ஞான ஆலயம் போன்றவைகளில்  பிரசுரமாயின . பிறகு ஜப்பானிய மொழி வேலையில் பிசி ஆகிவிட்டபடியால் கொஞ்சம் நிறுத்தி வைத்தேன்
பிறகு பிளாக்  டிவிட்டர் எழுதுகிறேன் .

ஆனால் நிலைமை இப்போது அப்படி இல்லை ,
நாமே பிளாக்    டிவிட்டர்     மூலம் எழுதிக் கொள்ளலாம் .

  தவிர  மற்ற எழுத்தாளர்கள் பாணியைத்தான்   நாம் பின் பற்றவேண்டும் என்கிற அபத்தமான எழுதப் படாத  ரூல்கள்  இல்லை .

  முன்பெல்லாம் ஒரு சில கார்டூனிஸ்டுகள் தவிர வேற யாரும் அரசியல் ,நாட்டு நடப்புகளைக் கிண்டல் செய்ய , எழுத அதற்கான தளம் அல்லது எழுதினாலும் பிரசுரம் செய்ய ,அவர்களை ஊக்குவிக்க என்ற சமாச்சாரங்கள் கிடையவே கிடையாது ,

 குறிப்பாகச் சொன்னால் ஒரு சிலரின் சிந்தனைகள் மட்டுமே எழுத்து   வடிவில்   சுகப்  பிரசவம் .
மற்றவர்களின் வித்தியாசமான சிந்தனைகள் குறைப்பிரசவம் ஆகின .


 இப்போது அப்படி அல்ல

  உதாரணமாக  Demonitize  செய்த அரை மணிக்கெல்லாம் ஏகப்பட்ட  சுவாரஸ்யமான மீம்ஸ் , ஜோக்ஸ் ,,கண்டனங்கள் , பாராட்டுக்கள் என்று  வந்து குவிந்துவிட்டன
நிச்சயமாக இவை எல்லாம் பழையகாலத்தில் வந்த  கார்ட்டூன்களுக்கு எந்த விதத்திலும் குறைவானவை அல்ல.

பலரின் வித வித மான சிந்தனைகளுக்கு ஒரு வடிவம் தர பிளாட்பாரங்கள் வந்து விட்டன

டிவிட்டரில் , பேஸ்புக்கில் ,பிளாக்கில் என்று மைக்ரோ பிளாக்கில் வந்த வண்ணம் .
அவற்றுக்கெல்லாம் ஏகப்பட்ட லைக்ஸ் . ஷேர்ஸ்  .

 அது மட்டுமல்ல .
 இப்பொழுது சில நியூஸ் பேப்பர் மற்றும்  வார இதழ்களிலும்  
 டி  வியிலும் சுவாரஸ்யமான  ட்வீட்டர்கள் ,மீம்ஸ் , வாட்ஸ் அப் காமெடிகள் இவற்றை அப்படியே பிரசுரம் / ஒளிபரப்புச் செய்கிறார்கள் .


சிந்தனை என்பதும் எழுத்து என்பதும் ஒரு சிலரின் ஏகாதிபத்திய உரிமை என்பது போய் யார் வேண்டுமானாலும்  , விருப்பப் பட்டால் ஒரு நிமிட எழுத்தாளர்களாகவோ  அல்லது   வாழ்நாள் எழுத்த்தாளர்களாகவோ ஆகலாம் என்ற நிலை வந்து விட்டது,
இது வரவேற்கத் தக்கது


Friday 25 November 2016

கார் நாற்பது


 இது பதினெண்கீழ் கணக்கு நூல்களுள் ஒன்று .

இப்பொழுது கை வசம் வேலை எதுவும் இல்லாத காரணத்தால் தமிழ் இலக்கியங்களை ப்  படிக்க ஆரம்பித்துள்ளேன் .

 நான்  ஸ்கூல் போற  சின்ன வயதில்  இந்த தலைப்பை
' என்னா இது கார் நாற்பது ன்னு ,அப்ப      லாரி நாற்பதுன்னெல்லாம் ஏன் எழுதலைன்னு கிண்டலடிச்சிருக்கேன் "

 வேலையில் சேர்ந்த பின் கன்னிமாரா நூலகத்தில் இதை எடுத்துப் படித்தேன் ஆனால்  அதன் ஆழம் புரியவில்லை .


 பிறகு இப்போது படித்தால் தான் அதன் ஆழம் புரிகிறது தவிர அதுமாதிரி எழுதுவது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பது ம்  புரிகிறது .

 வயதும் அனுபவமும் பலவற்றைக் கண்டு ரசிக்கவைக்கிறது என்பது உண்மை .
இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.

திருமால், பலராமன், சிவன் ஆகிய கடவுளர்களைக் கூறியிருப்பதன் மூலம்  இது சைவம் வைணவம் இவை தழைத்து ஓங்கிய காலத்தது  என்பது புரிகிறது .

 மொத்தம் நாற்பது பாடல்கள் ..

இதில்   முக்கியமானவர்கள்  பொருளீட்டச் சென்ற தலைவன்  கார்காலம் வருவதற்குள் நான் வருவேன்என்று சொல்லிப் போனான்.

  அவன் வரவுக்குக்காகக் காத்திருக்கும் தலைவி .

அவள் தோழி .  

தலைவனின் தேர் ஓட்டும் பாகன் . அவனுக்குப்    passive role  . பேசவில்லை எதுவும்

 இவர்களை ப்  பின்னுக்குத் தள்ளும் கார்கால  வர்ணனைகள் ,

 சிறப்பாக மழை பற்றி .

 கடைசி வரை தலைவன் வந்தானா என்று சொல்லவில்லை ,
( இல்லை நான் புரிந்து கொள்ளவில்லையா என்றும் தெரிய வில்லை ).

வந்தன செய் குறி; வாரார் அவர் என்று
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி,
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று, எழில் வானம்;
நந்தும்,-மென் பேதை!-நுதல்.      உரை
நோய்     தீர் மருந்து ஆகி, என்று  நேர்மறை வார்த்தையுடன் முடிவதால் 
தலைவன் சீக்கிரம் வந்து சேர்கிறான் என்று நினைக்கிறேன்
               
 கார்காலத்தில் வனப்பை  அழகாக விவரித்துள்ளார் .

 நான் கற்றுக்  கொண்ட பல  புது த்  தமிழ் வார்த்தைகள்
 நமர் = நம் தலைவன்      பகழி =அம்பு நாச்சியார் = விரும்பியவர்
நந்தனார் =பகைவர்
புறவு =காடுகள்  இன்னும் பல உள்ளன .

  இதில் உள்ள உவமைகள் ரொம்பவே சிறப்பாக உள்ளன .

  தலைவியின் கண்களை ப்
 " பகழிபோல் உண் கண்ணாய்!- "
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்"
 என்றெல்லாம் தோழி வர்ணிக்கின்றாள்.


இந்த பாரு கார்காலம் வருவதற்கான அறிகுறி தென்படுகிறது   வந்துடுவார்” என்று  ஆறுதல் சொல்கிறாள் .

 தோழி என்பவள் எந்த ஒரு இடத்திலும் எதிர்மறையான சொல்லைச் சொல்லவே இல்லை . அது வரை அவள் ரொம்ப நல்லவள்  ( டி. வி  சீரியல் தோழிகள் மாதிரி அடுத்துக் கெடுக்கவில்லை )

 அவன் உன்னை விட்டுப் போனதுக்கு காரணம்
'இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் "
செல்வம் தரல் வேண்டிச் சென்ற நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம் '


புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்,

வேண்டுமென்றே  உன்னை விட்டுப் போகவில்லை என்றெல்லாம் சொல்கிறாள் .

 கையை விட்டு  வளைகள் இறங்கும் அளவுக்கு இளைத்த தலைவியிடம்
 "தா பாரு கார்காலத்துக்கு ஆன அறிகுறிகள் வந்து விட்டன , கருவிளை பூக்க ஆரம்பிச்சுடுச்சு  கவலைப் படாதே  வந்துடுவார் "என்பதை அழகாகச் சொல்கிறாள்

கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று;
எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை
முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்,
இன் சொல் பலவும் உரைத்து.


மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்;-(௧௨)
நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம் '



கவலைப் படாதே வானம் தூது  போய் இடி இடிச்சு நேரம் தாழ்த்தாதே ( நீடன் மின் ) என்று சொல்லும் என்பதை
கடிதிடி வான முரறு நெடுவிடைச்1
சென்றாரை நீடன்மி னென்று.
 இலக்கிய நயத்துடன் தோழி சொல்கிறாள்



 மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனாருக்கு  பொம்பளைங்க ஜாஸ்தி பேசினா புடிக்காதா என்ன தெரிய வில்லை , தலைவியை வர்ணிக்கும் பொழுது இரண்டு இடங்களில் சில் மொழி, பேதை வாய்(19 )  மற்றும் 39 ம் பாடல்களில் சில் மொழிப் பேதை ஊர்  என்றெல்லாம் சொல்கிறார் .

 தேர் ப் பாகனிடம் தேரை வேகமாக ஒட்டு ,!ஊரில் பெரிய விருந்து இருக்கு நமக்கு என்று    சொல்கிறான் .
பக்கத்து இலைக்கு  ப் பாயசம் ஊத்தணுங்கிற மாதிரி  ( தான் விரைந்து செல்லவேண்டும் என்பதற்க்காக அல்ல )

சில் மொழி, பேதை ஊர்
நல் விருந்து ஆக, நமக்குஎன்கிறான்.

ஆனால்   தலைவனின்   மனம் முன்பே   தலைவியிடத்துச் சென்று அடைந்து விட்டது என்பதை
"பைங் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி,
நெடு இடைச் சென்றது, என் நெஞ்சு. "19
 பாடல் வரிகளால் சொல்லப்பட்டது .

இவை எல்லாவற்றையும் விட எனக்கு ரொம்பவே  பிடித்த ஒரு விஷயம்
 மழையின் வர்ணனைதான் . உரைநடையில் மழை பெய்தது என்பதை நம்மால் மிஞ்சி மிஞ்சி   கனமழை ,அடை மழை , பெரு மழை இவ்வளவுதான் .

ஆனால் புலவரோ 

  "வானம்    கரு இருந்து ஆலிக்கும் போழ்து? (1

எழில் வானம்   மின்னும், அவர் தூது உரைத்து.(2)
  
உரும் இடி வானம் இழிய, எழுமே-(3)

கடிது இடி வானம் உரறும், (6)

பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல
எச் சாரும் மின்னும் மழை.(7)

வேந்தர்  களிறு எறி வாள் அரவம் போலக் கண் வௌவி,
ஒளிறுபு மின்னும், மழை.(13

பெருங் கலி வானம் உரறும்-(16  )    

அறைக் கல் இறு வரைமேல் பாம்பு சவட்டி,
பறைக் குரல் ஏறொடு பௌவம் பருகி,
உறைத்து இருள் கூர்ந்தன்று, வானம்(17  )      

செரு மன்னர்
சேனைபோல் செல்லும், மழை.(2௦)

கண் திரள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று(23 )

புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.(26       )
               
முருகியம்போல் வானம் முழங்கி இரங்க,(27 ) .   
    
இமிழ் இசை வானம் முழங்க,(28 )

அப்பப்பாஎத்தனை விதமான வர்ணனைகள் !

ஒரு முறை படித்துப் பார்க்கலாம் , ஆஹா ... நாமும் பதினெண்கீழ் கணக்கு 

நூல்களுள் ஒன்றைப் படித்தோம்  என்ற  பெருமை

 கிடைக்குமே .



Friday 18 November 2016

வாதத் திறமையில் வல்லமை



வாதம் செய்வது என்பது , நான் சொல்வது தமிழ் சினிமாவில் அரிவாளைத் 
தூக்குவது அல்ல

வல்லமையை வார்த்தை மூலம் காட்டி ,   அரசனாயினும் சரி   
  
அல்லது கடவுளே மனித ரூபத்தில் வந்தாலும்    சரி துளியும் கவலைப் 
படாமல் அறத்தை நிலை நாட்டும் வாதத் திறமை

 தமிழ் இலக்கியத்தில் வரும் கதா பாத்திரங்களில் வாதம் செய்யபவர்கள் பலர் இருந்தாலும் நான் எடுத்துக் கொண்டுள்ளது வாலி கண்ணகி மற்றும் நக்கீரன் மட்டுமே .
.இந்த மூன்று பேருக்கும் உள்ள ஒற்றுமை

இந்த மூவரில் எவருமே என்ட்ரான்சு பரீட்சை எழுதி சட்டக் கல்லூரியில் 

பயின்றவர்கள் அல்ல.

 நக்கீரன் " எமக்குத் தொழில் கவிதை "

கண்ணகி    "வீட்டுக் குயில் ."

வாலி எப்படியாகப் பட்ட எதிரியையும் வீழ்த்தக் கூடிய திறம் ,வலிமை நிறைந்த அரசன் powerful பதவி .

 இந்த மூவருமே அறமற்ற வழியில் தமக்கு இழைக்கப் பட்ட அநீதியைத் 

தட்டிக்கேட்ட தைரியசாலிகள்.

  இதில் கண்ணகி தன்னந்தனியே எந்த ஒரு  சப்போர்ட்டும் 

இல்லாது  அதுவும் வேற்று நாட்டில்  ( அந்நாளில் விசா கிடையாது
அந்த நாட்டு மன்னனிடம் நேரிடையாக வாதம் செய்கிறாள் .
  கிழக்கும் தெரியாத மேற்கும் தெரியாத எந்த ஒரு உறவும் , தெரிந்த மனிதரும் இல்லாத ஊரில் ...... அவள் .
ஆனால் ரொம்பத் தெளிவாக இருக்கிறாள் .

அவளின் கோபத்தை  வாயிற் காப்போனிடம் பேசும்போதே ஹை பிச்சில் தான் 

ஆரம்பிக்கிறாள் .
 உன் அரசன் அறம் பிழைத்தவன் என்பதை  முதலிலேயே சொல்லிவிடுகிறாள்
அதுவும்   விவரமாகத்  தப்பு உன்பால்     இல்லை ,உன் அரசன் பேரில்தான்.
ஆனால் நீ  அப்படிப் பட்டவனிடம் தான்  துப்பு    கெட்டத்தனமாக    வேலை 
பார்க்கிறாய் என்பதை hint   செய்கிறாள் .

"வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே. " என்கிறாள் ..

 நக்கீரானது விஷயத்தில்  காட்சி மாறுகிறது .
கடவுள் அரசவைக்கு வந்து நக்கீரனிடம் வாதம் செய்கிறார் .  

இங்கே நக்கீரன் கண்ணகி போல்  தனித்து இல்லை ,
அவையோர் பலர் இருக்கின்றனர் . ( அங்கேயும் சில எட்டப்பன்கள் இருந்திருக்கலாம் ,) இங்கே  ஈசன் வந்து எவண்டா என் பாட்டில் குறை சொன்னது  என்றதும் நக்கீரன் பயம் கொள்ளாது   உடனே  நேரம் தாமதிக்காமல் செம்ம தெளிவுடன் 

"நான்தான்யா உன் பாட்டில் குறை சொன்னேன் "என்கிறார் .

ஆரவை குறுகி நேர் நின்று அங்கு இருந்தவரை நோக்கி
யாரை நங் கவிக்குக் குற்றம் இயம்பினார் என்னா
                                       முன்னம்
கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் நின்ற
சீரணி புலவன் குற்றம் யாது எனத் தேராக் கீரன்.



வாலியின் விஷயத்தில் கதைக்   களமே வேறு.

 வாலி கண்ணகி மாதிரி தனித்து இல்லை அவனது படை கூட உள்ளது , மேலும் அவனுக்கே உள்ள வரம் ( அதாவது எதிரியின் பலத்தில் பாதி  வாலிக்கு  ஆட்டோமேட்டிக்காக  ட்ரான்ஸ்பர்  ஆகிவிடும் )   அதுவே  ஒரு பெரிய பலம் .


“பாரினை வேரோடும் பறிப்பல்  என்று ஓரும் அழுந்தும்         
இச்சரம்  எய்தவன் ஆர் கொல் ?”

என்றபோது  இராமன் உடனே நேரில் வருவதாக  சொல்லப்படவில்லை .

சுக்கிரீவன் தான் வருந்தி வீழ்ந்தான் .


 தேவரோ?' என அயிர்க்கும்; 'அத் தேவர், இச் செயலுக்கு
ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ ?' எனும்; 'அயலோர்
யாவரோ?' என நகைசெயும்; 'ஒருவனே, இறைவர்
மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்' என மொழியும்.           

நேமிதான் கொலோ? நீலகண்டன் நெடுஞ் சூலம்,
ஆம் இது, ஆம் கொலோ? அன்று எனின், குன்று உருவு அயிலும்,
நாம இந்திரன் வச்சிரப் படையும், என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ? யாது?' எனப் புழுங்கும்.

 ஒரே குழப்பமாக இருக்கிறது அவனுக்கு , இது யாராக இருக்கும் என்று .

வாலி அது இராமன் என்பதை அந்த அம்பில் இராமனின் பேர் இருப்பதைப்  பார்த்து விட்டுப் புரிந்து கொள்கிறான் இது  இராமனின் வேலை என்று .



 நேரே சென்று வாதம் புரியும் போது கண்ணகி  தெள்ளிய மனத்தினளாய்  அரசனை முதலிலேயே தேரா மன்னா! செப்புவது உடையேன்;

என்று சொல்லிவிட்டு த் தன் பிறந்த ஊர்ப்  பெருமை யைச் சொல்லுகிறாள்.


எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே;

பிறகு தன்னைப் பற்றி ச் சொல்லும் போதே வழக்கு என்ன

( Case details in brief ) என்பதையும் சொல்லிவிடுகிறாள் .
அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே என- ‘

உடனே அரசன்
  பெண் அணங்கே!      கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;

 என்கிறான் .

 யாருகிட்ட? ……ம்   ……என்கிற தொனியில்  வள வள ன்னு பேசாம நேரே மேட்டருக்கு வந்து       சிலம்பை உடைச்சு        நீதாண்டா     கள்வன் என்கிறாள் .

 பாண்டியன் திருடிய பொருளைத் தன் வசம் வைத்திருந்ததனால் திருடன் ஆகி விட்டான்
"யானோ  அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்..
உடனே விழுந்து விடுகிறான் உயிர் துறக்கிறான்.

 சடுதியில் கண்ணகி விஷயத்தை முடிக்கிறாள்.

நக்கீரன்  மேட்டரிலும் விஷயம் சீக்கிரமே முடிகிறது . ஒன்னை   அடிச்சு அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பகூட மகளிரின் கூந்தலுக்கு   மணமில்லை    என்று   சொல்லணும் ன்னு யாரோ சொல்லிக்கொடுத்த மாதிரி  , அவங்க கூந்தலுக்கு , இவங்க கூந்தலுக்குன்னுட்டு கடைசியிலே  சிவனின் மனைவி கூந்தலுக்கு என்று கேட்ட போதும்  தயங்காமல் அதுக்கும் வாசனை கிடையாது போய்யா என்று கூறி விடுகிறான் .


உற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்.     
               
 கடவுளாக இருந்தாலும் மனைவியைக் குறை சொன்னால் அதோ கதிதான் என்பதைப் புரிந்துகொள்ளாததனால்    " விளைவு நோக்கான்.  " என்கிறாரோ .?

 ஈசன் கோபத்துடன் பார்த்தபோதும் கலங்காமல்  தான் சொன்னதையே சாதிக்கிறார் நக்கீரன்
கற்றை வார் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே
                                      காட்டப்
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம் பரார் பதி போல்
                                       ஆகம்
முற்று நீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்.        
 

வாலி விஷயத்தில் வாலி பல வித கேள்விக்கணைகளைத் தொடுக்கிறான்  இராமன் கொஞ்சம் தடுமாறித்தான் போகிறான் .

'வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!
தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?
தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும், தழுவி நின்றாய்!             

'குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் - திண்மை
அலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்?     
 என்கிறான்

 மேலும் மனைவியை  விட்டுப் பிரிந்ததனால் புத்தி கெட்டுப் போயிடுச்சா உனக்கு     என்கிறான் .


"ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! "


  எந்த   மனு நெறி பாய்ண்டுலே நீ வந்து என்னைக் கொன்றாய்


'அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல, மனு நெறி கூறிற்று உண்டோ?

சூப்பராக்கேட்கிறான் வாலி .

 மேலும்  எனக்கும்  உனக்கும் என்ன தகராறு  எம்மேலே என்ன தப்பு ?

இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்?

 என்கிறான் 

 உன் ஊரில் நாட்டைத் தம்பிகிட்டே  கொடுத்திட்டு இங்கே வேற 
மாதிரி     பாலிடிக்ஸ் பண்றே .
இது என்னா நியாயம் ?
"பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து,
நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு, இவ் அரசை நல்கி,
காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம் தான் இதன்மேல் உண்டோ ?

 ஏன்  நடு நிலை இன்றி பாரபட்சமாக உள்ளாய் ?

'இருமை நோக்கி நின்று, யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ, அறம் காக்கின்ற பெருமை என்பது? இது என்? பிழை பேணல் விட்டு,
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ?         

 என்று பலவிதமாகச் சொன்னாலும்   இன்னும் இராமனின் செயலை சரி என்பவர் உள்ளனர் .

 கண்ணகியின் விவாத வெற்றி எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் படுகிறது .

 நக்கீரனின் வெற்றி  வாதத்தில் முடிந்தாலும் இரண்டு பார்ட்டிகளும் சமரசம் பண்ணிக் கொள்கிறார்கள் .

வாலியின்  வதமும்  , அவன் வாதமும்  காலம் காலமாக விவாதிக்கப் படுகிறது, எதிகாலத்திலும் அதே ஸ்டேட்டஸ் மெயின்டைன் ஆகும்