Thursday 17 December 2015

சென்னை வெள்ளம்



 சென்னை வெள்ளம்
 பற்றி எல்லோருமே எழுதி விட்டார்கள்
ஒரு வாரமாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருந்தோம்
வீட்டைச் சுத்தம் செய்ய இவ்வளவு நாட்கள் தேவைப் பட்டது .

எங்கள் வீட்டைச் சுற்றி ஒரே வெள்ளம் ... நாங்கள் முதல் மாடியில் இருந்ததினால் வீட்டு உள்ளே இருந்த சாமான்களுக்கு பாதிப்பு இல்லை ,ஆனால் கார் நகர மறுக்கிறது  .

என் மகன்கள் இருவருமே வேறு இடத்தில் இருப்பதால் அவர்கள் ரொம்பவே கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள் . ஒரு வழியாக என் இரண்டாவது மகனின் கிளாஸ்மேட் மற்றும் எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரியில் நான் பார்ட் டயம் ஆசிரியராக இருந்தபோது என் மாணவியுமான ஒரு பெண்
அவள் பெங்களூரில் வேலை பார்க்கிறாள்  அவளை என் மகன் தொடர்பு கொண்டு
பின் அவள் தன் பெற்றோரைப் பார்க்க சனி ஞாயிறு அன்று சென்னை   வந்தபோது எங்கள் வீட்டுக்கும் வந்து காய் கறிகள் எங்கோ ஸ்கூட்டரில் போய் வாங்கி வந்தாள்.

எங்களது கார் முழுகும் வரை  வெள்ளம் .
இப்போது அதை ரிப்பேர் செய்ய 42000/- கேட்கிறார்கள் .


 இத்தனைக்கும் எங்கள் வீடு மேடான இடத்தில் தான் உள்ளது .
இதனாலேயே மக்கள் கூட்டம் எங்கள் தெருவிலேயே சுற்றிக் கொண்டு இருந்தார்கள் . கிட்டத்தட்ட காணும் பொங்கல் விழா அன்று உள்ள கூட்டம் மாதிரியே இருந்தது .அசோக் பில்லர் அருகே என்பதால் கொஞ்ச நாழிகையில் முழங்கால் அளவு தண்ணீர் ....


 சிலர் பாவம் ஒரு வாடகை டாக்சி பிடித்துக் கொண்டு எங்கு போவது என்று தெரியாமால் சுற்றிக் கொண்டு இருந்தனர் . பெரியதும் சிறியதுமாக ரோடின் இரு புறமும்  ஓரத்தில்  சாய்வாக நிறுத்தப் பட்ட நிலையில் நிறைய வாகனங்கள் .... ( in the car slope ) சில ஆண்கள் காரிலேயே இரவைக் கழித்தனர் .. .... மறுநாள்  காலையில் நட்ஸ் அண்டு ஸ்பைசஸ் கடை திறந்தபின் அங்கே பொருட்களை வாங்கிக்கொண்டனர் .

 ஒரு நாள் கழித்துத் தான் வீதியில் ஒரு முப்பது அடி தூரத்துக்கு நடக்க முடிந்தது .  பக்கத்துத் தெருவில் படகில் மக்கள் சென்றுகொண்டிருந்தனர் . எங்கு சென்றுகொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை .


பல கடைகளில் கீழே உள்ள இரண்டு மூன்று தட்டுக்கள் வரையில் இருந்த பொருட்கள்  கெட்டுப் போனதால் வீதியில் வீசப் பட்டன.
முழுக்க நனைந்த  உடையுடன் இளநீர் விற்கும் பெண்மணி என்னைக் கண்டதும் அழுது கொண்டே அம்மா மாத்துப் புடவை இருந்தால் கொடும்மா என்றாள்.
உடம்பு பாவம் நடுங்குகிறது . வீடு எங்கோ பக்கத்தில் ...ஆனால் அவளால் போகமுடியவில்லை . ஒரு நாள் முழுக்க சாப்பிடவே இல்லையாம் இளநீர்கள் வெள்ளத்தில் கொண்டு போகப் பட்டன என்றாள் .எங்கள்  வீட்டில் கரண்டும் இல்லை ,மெழுகு வத்தியும்  கிடையாது . அகல் விளக்கில் தான் சமையல் . பகலிலும் அகல் விளக்கு தேவைப் பட்டது .
 ஒரு பெரிய பிஸ்கட் பாக்கெட் கொடுத்தேன். மாத்துப் புடவை மட்டும் தான் கொடுக்க முடிந்தது
என் பிளவுசு அவளுக்கு சின்னதாக  இருக்கும் .
இல்லம்மா சட்டை இல்லாட்டியும் பரவாயில்லை என்றாள் .
ஒரு வாரமாகக் கடையும் திறக்கவில்லை .
ஏ டிஎம் வேலை செய்யவில்லை .
 பலரும் கிடைத்த பொருளை அதிக விலைக்கு விற்பதைக் காண முடிந்தது.
ஆறு நாட்கள் கரண்டு இல்லை .
நெட் கனெக்ஷன் கிடைக்க இன்னும் இரண்டு நாள் ஆனது .
 பி எஸ் என் எல் வேலை செய்ததால் திருச்சியில் உள்ள  என் உறவினர்களுடன் பேசி என் மகன்களுக்கு மெயில் அனுப்பச் சொன்னேன்
  வெள்ளம் கற்பித்த பாடம் என்று பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள் .
எனக்குப் புரிந்ததெல்லாம் இது ஒரு கடினமான பாடம் என்று சொல்வேன் .

 பணம் இருந்தவர்களும் , சிக்கனமாக இருந்து பணத்தைச் சேர்த்து வைத்தவர்களும் கஷ்டப்பட்டார்கள் பணத்தைச் சேர்த்து வைக்காதவர்களும் கஷ்டப்பட்டார்கள் .
மளிகை சாமான்கள் வாங்கி வைத்தவர்களும்  கஷ்டப்பட்டார்கள் . ( கீழ் தளத்தில் இருந்தவர்கள் ).
மளிகை சாமான்கள் வாங்கி வைக்காதவர்களும் கஷ்டப்பட்டார்கள் .. ( முதல் மற்றும் இரணடாவது மாடியில் இருந்தவர்கள் ).

2 comments:

  1. உண்மைதான் ..சகோதரி. எல்லா தரப்பினரும் கஷ்டப்பட்டனர் என்பதுதான் உண்மை. நிஜமாகவே நிறைய பாடங்கள்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி

    ReplyDelete